Showing posts with label ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label ஆசிரியர்கள். Show all posts

Tuesday, 20 October 2020

மாணவர் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் வகிபங்கு




மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக காணப்படுவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியர் மாணவர்களின் இயல்புத் தன்மை, சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.


தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் முறைகளை கையாளுகின்றார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள் வருமாறு:


விரிவுரை முறை என்பது சம்பிரதாய பூர்வமான கற்பித்தல் முறையாகும். இம்முறையானது ஆசிரியர் மையத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. ஆசிரியர் இம்முறையில் கற்பிப்பதால் மாணவர் செயற்படுவது குறைவாக இருக்கும். உயர் வகுப்புகள், செயலமர்வுகள் போன்றவற்றுக்கு இக்கற்பித்தல் முறை பொருத்தமானதாக இருக்கும். குறுகிய விரிவுரைகளை நிகழ்த்தி, அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும் பல்வேறு வரைபடங்கள் வீடியோப் படங்கள் காட்சிப்படுத்தல் போன்ற முறைகளினூடாக விரிவுரை அமையும் போது விரிவுரை வினைத்திறனுடையதாகவிருக்கும். விரிவுரை முறையினூடாக பொறுமை சகிப்புத்தன்மை அமைதி ஒத்துழைப்பு கிரகித்தல் மதிப்பளித்தல் செவிமடுத்தல், பணிவுடன் கலந்துரையாடல் போன்ற விழிமியப்பண்புகள் பிள்ளையிடம் வளர்க்கப்படுகின்றன.


குழு முறை இன்று பாடசாலைகளில் பரந்தளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறையாகும். சிறுபிள்ளைகள் சமவயதுக் குழுவினருடன் செயற்படுவதற்கு விரும்புவர். இதனால் பிள்ளைகள் ஆரம்ப வகுப்புகளில் குழுமுறையில் வகுப்புகளில் அமர்கின்றனர். 5E கற்பித்தல் முறையின் போது குழு முறை பயன்படுத்தப்படுகிறது. வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சிறு குழுக்களாகப் பிரித்து கருத்துக்களை சேகரிப்பதற்கு குழுக்களாக பிள்ளைகளை ஈடுபடுத்தல் இதன் அடிப்படை நுட்பமாகும். இக்குழுமுறையில் தேடியறிதல், ஒப்படை, விளையாட்டு என்பவற்றில் பிள்ளைகள் குழுக்களாக ஈடுபட்டு கற்பர். இதன் போது இக்குழுமுறை கற்பித்தலை மேற்கொள்ளலாம். இக்கற்பித்தல் முறையானது சிறந்த கற்பித்தல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.


வினாவுதல் முறையை பாடப் பிரவேசத்தின் போது கற்பித்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்து கொள்வதற்கும் ஆசிரியர் பயன்படுத்துவர். அத்துடன் இந்நுட்ப முறையை ஏனய கற்பித்தல் முறைகளுடன் தொடர்பு படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.


ஒப்படை வழங்கல் முறை என்பதில் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒப்படைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைக் கல்வியில் மாத்திரமன்றி ஆரம்பக் கல்வியிலும் ஒப்படை முறையை பயன்படுத்த முடியும். இது முழுமையாக மாணவரை மையமாகக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையாகும். சமகாலப் பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொள்ளுதல், அல்லது பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொள்ளுதல், செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல், விஞ்ஞானப் பாடம் தொடர்பாக அனுபவம் பெறல், போன்ற விடயங்கள் ஒப்படையாக மேற்கொள்ள முடியும்.


கண்டறிதல் முறை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையாகும். யாதாயினும் ஒரு பிரச்சினையை அல்லது சம்பவத்தை தேர்ந்தெடுத்து அது தொடர்பில் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்குட்படுத்தி அதனூடாக தேவையான பதிலை அல்லது அறிவை ஒன்று திரட்டிக் கொள்ளல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.


விளையாட்டு முறை கற்பித்தல் முறையில் மாணவர் உற்சாகத்துடன் ஈடுபடுவர். கணிதம், மொழி, சங்கீதம் போன்ற பாடங்களை விளையாட்டு முறை மூலம் கற்பிக்க முடியும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். சிறு பிள்ளைகளுக்கான வெற்றிகரமான ஒரு கற்பித்தல் முறையாக இதனைக் கருத முடியும். வகுப்பறைக்கு வெளியில் அல்லது விளையாட்டு முற்றத்தில் இக்கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு ரீதியான அனுபவம் கிடைப்பதோடு வகுப்பறையும் பாடசாலையும் பிள்ளைகளுக்கு பிடித்தமான இடமாக மாறும்.


சிந்தனைக் கிளறல் -முறை என்பது ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மாணவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களை நிராகரிக்காமலும், திருத்தியமைக்காமலும், விமர்சிக்காமலும் இருத்தல் வேண்டும்.


வெளிக்களக் கற்கை முறையானது வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை குறிக்கும். இடை நிலை மாணவருக்கே இது மிகவும் பொருத்தமானதாகும். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வயதுக் குழுவினருக்கேற்ப பொருத்தமான வேலைத் திட்டங்களை தீர்மானித்து இவற்றை நடைமுறைப் படுத்தலாம்.


வெறும் வேடிக்கை வினோதங்களுக்காக மாத்திரம் கல்விச் சுற்றுலாக்கள் செல்லாது மாணவரின் அறிவு வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் கல்வி சுற்றுலாக்கள் அமைய வேண்டும். விஞ்ஞான ரீதியான விடயங்கள் புவியின் அம்சங்கள் வரலாறுகள் தொல் பொருளியல் சார் விடயங்கள் என்பவற்றை உயர் வகுப்பு மாணவர்களுக்கு பெருத்தமான விதத்தில் திட்டமிட்டு கல்விச் சுற்றுலாக்களை திட்டமிட்டு மாணவர் அனுபவரீதியாக கற்பதற்கு வழிப்படுத்த வேண்டும்.


நுண்முறைக் கற்பித்தல் முறையை வகுப்பறையில் கற்பிக்கும் போது விளங்காத மாணவரை, இடர்படுபவர்களை தனியாக அழைத்து உரிய பாடவிடயத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு பயன்படுத்த முடியும். இடர்படும். மாணவரை கரும்பலகைக்கு அருகில் அழைத்து ஐந்து, பத்து நிமிடங்கள் தனிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும்.


முன்வைத்தல் என்பது கற்றல் கற்பித்தல் என்பதை விட தனியாளின் ஆற்றலை அல்லது தகைமையை வெளிப்படுத்தும் ஒரு அணுகு முறையாக கருதப்படுகிறது. இது வயது வந்தோருக்கான கல்வியில் இதனை ஓர் கற்றல் முறையாகவும் பயன்படுத்த முடியும்.


போலச்செய்தல் கற்றல் கற்பித்தல் முறையில் பிள்ளை நேரடியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்வர். ஒரு செயற்பாடு நிகழ்வதை அவ்வாறே முன்வைத்தல் போலச் செய்தலாகும். அதற்கிணங்க பெறப்படும் அனுபவம் முழுமையான கற்றலாகும். இம்முறையைப் பிரயோகித்து முன்வைக்க எதிர்பார்க்கும் அறிவுத் தொகுதியானது மிகவும் வினைத்திறனுள்ளதாக அமையும்.


பிள்ளைகளுக்கு ஏதாவதோர் விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இக்கற்பித்தல் முறை பயன்படுகிறது போலச் செய்தல் முறை செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதில் விருப்பமுடையவர்களாக இருப்பர். எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது சிறந்த பரீட்சை அடைவு மட்டத்தை பெறலாம்.

Monday, 19 October 2020

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள்

 


உரிமைகளைப் பொறுத்தவரையில் வேதனம், வருடாந்த சம்பள உயர்ச்சி, ஓய்வூதியம், விதவைகள் விதுரர் அநாதைகள் ஓய்வூதியம், அரசியல் உரிமைகள், தொழிற்சங்கஉரிமைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முதலில் ஓய்வூதிய உரிமை பற்றிய விளக்கத்தை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஓர் ஆசிரியர் இளைப்பாறும் போது ஓய்வூதியம் பெறும் உரிமை உடையவராவார். 20 வருட சேவையை முடித்த ஆசிரியர் சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம். ஆனால் 55வயது நிறைவின் பின்னரே அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.


பெண் ஆசிரியர் 20 வருட சேவையை முடித்து ஓய்வு பெற விரும்பினால் அத்திகதியிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். சேவையின் போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் ஓர் ஆசிரியர் மரணமடைவாராயின் அவரின் விதவை/விதுரர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் குறித்த ஆசிரியருக்குரிய ஓய்வூதியத்தைப் பெறும் உரித்துடையவராவார்.


அரச ஊழியரின் பிள்ளையொன்று ஊனமுற்றிருப்பின் அப்பிள்ளை தான் உயிர் வாழும் காலம் வரை தந்தை அல்லது தாயின் ஓய்வூதியத்தைப் பெறலாம். இருவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாயின் எவரது ஓய்வூதியம் கூடியதோ அதைனை ஓய்வூதியமாகப் பெறலாம்.


ஓர் அரசாங்க ஊழியர் குறைந்த பட்சம் 10 வருட காலம் சேவை செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்க வேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்.எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு. யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள்,பெண் பொலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.


மரணப்பணிக்கொடை:


ஓர் அரச ஊழியர் சேவையின் போது மரணமடைந்தால் மரணப் பணிக்கொடை வழங்கப்படும். அது சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 5வருடத்திற்குட்பட்ட சேவைக் காலம் எனின் ஒருவருட சேவைக்கு ஒருமாதச் சம்பளம் என்ற அடிப்படையிலும், சேவைக்காலம் 5 தொடக்கம் 10வருடத்திற்குட்பட்டதாயின் ஒரு வருடச் சம்பளம், சேவைக்காலம் 10வருடத்திற்கு மேற்பட்டதாயின் கடைசி மாதச்சம்பளத்தின் 90வீதத்தின் 24 மடங்கு ஆகும். 30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றால் கிடைக்கும் . இது சம்பளத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். 13280/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 85%தையும் 37805/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 75% ஐயும் ஓய்வூதியமாகப் பெறுவார்.அத்தோடு வாழ்க்கைச் செலவுப்படி 3525/= ,விசேட படி 3500/= மேலதிகமாகக் கிடைக்கும்


30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும் .20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும். ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= ஆகும். இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/= ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.


அரசியல் உரிமை:

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES), மற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் (SLPS) 1 க்கு இவ்வுரிமை இல்லை. ஆனால் இலங்கை ஆசிரியர் சேவையைச் (SLTS) சார்ந்தவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு.அதேவேளை அதிபர் சேவைதரம்2 இற்கும் உண்டு. அரசியல்உரிமை எனும் போது அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் உரிமை, அரசியல் கட்சிகளை உருவாக்கும் உரிமை,அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் உரிமை,அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


ஓர் ஆசிரியர் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், கருத்துத் தெரிவிக்கலாம், துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுலோகங்கள் கட்டுரைகள் எழுதலாம், பிரசுரம் செய்யலாம்,பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடலாம்.


ஆசிரியர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக இறங்கவிரும்பினால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் முன்பதாகவே விடுமுறையில் செல்ல வேண்டும். இதற்காக அவர் வேட்புமனுத்தாக்கலுக்கு ,10நாட்களுக்கு முன்னதாக அதிபருடாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு, எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். வெற்றிபெறும் பட்சத்தில் பதவியிலிருந்து இளைப்பாற்றப்படுவார்கள். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இளைப்பாற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தொழிலோடு, உள்ளூராட்சி பதவியையும் ஆற்றுவதற்கு உரிமையுண்டு. அச்சேவையை ஆற்ற முழுச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையுண்டு. வழமையான இடமாற்ற நடைமுறையிலரிருந்து அவருக்கு விலக்களிக்கப்படும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவாராயின் தேர்தல் திகதியிலிருந்து தான்வகித்த பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்படுவார்.


தாபனவிதிக்கோவையின்படி(E.CODE) அரசியல்உரிமை இல்லாதவர்கள் எந்தத் தேர்தலாயினும் தமது வாக்குகளை அளிக்கின்ற உரிமை உள்ளது. அதைத் தவிர ஏனைய அரசியல்நடவடிக்கைகளில் பங்குபற்ற உரிமைகள் இல்லை. ஓர் ஆசிரியர் தனது கடமைகளை சரிவரச் செய்த பின்னர், திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட முடியாதவை உரிமைகளாகும். அதற்கப்பால் சில வசதிகள் உள்ளன. அவற்றை சலுகைகள் என்போம்.

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...